மந்தைவெளியை சேர்ந்தவர் தங்கமணி (32), இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு பரணி (3), திவ்யா (2) என மகன், மகள் உள்ளனர்.
தங்கமணி உறவினரின் திருமண நிச்சயதார்த்தம், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அதில் பங்கேற்க தங்கமணி, தனது மனைவி, குழந்தைகளுடன் சென்றார். அங்கு வந்திருந்த குழந்தைகளுடன் பரணியும், திவ்யாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். இரவு 9 மணியளவில் திடீரென திவ்யாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த தங்கமணி, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவள் காலில் கொலுசும், காதில் கம்மலும் அணிந்திருந்தாள். இதுகுறித்த புகாரின் பேரில், தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, எண்ணூரை சேர்ந்த இதய நோயாளி யமுனா (60), ஸ்டான்லி மருத்துவமனையில் மாத்திரை வாங்க நேற்று வந்துள்ளார். காலை 11 மணியளவில் ஒரு ஆசாமி அவரிடம் குழந்தையை கொடுத்து, ‘கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள், ஓ.பி. சீட் வாங்கிக்கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அந்த ஆசாமி வரவில்லை.
இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில், ஸ்டான்லி மருத்துவமனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மல்லிகார்ஜூன், தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் சென்று குழந்தையை யமுனா கொடுத்துள்ளார். ஏற்கனவே குழந்தை காணவில்லை என்று போலீசா ருக்கு மைக்கில் தகவல் வந்திருந்ததால், தண்டையார்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, குழந்தையின் பெற்றோர் தங்கமணி, முனியம்மாள் ஆகியோருடன் அங்கு வந்தார். குழந்தையை பார்த்ததும் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
மூதாட்டி யமுனா கூறிய அடையாளத்தின் அடிப்படையில் அந்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். குழந்தையின் வெள்ளிக்கொலுசு, தங்க கம்மல் ஆகியவற்றை காணவில்லை. ‘‘நகை போனாலும் பரவாயில்லை, குழந்தை கிடைத்ததே போதும்’’ என்று பெற்றோர் கூறிவிட்டுச் சென்றனர்.
குழந்தைகளை குறிவைக்கும் கும்பல்
ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கடந்த வாரம் பிறந்த ஆண் குழந்தையை ஒரு பெண் கடத்த முயன்றார். அதேபோல், வியாசர்பாடி மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்த சில மணி நேரத்தில் ஆண் குழந்தையை ஒரு பெண் கடத்திச் சென்றார். போலீசாரின் தேடுதல் வேட்டையில் அந்த பெண்ணும், குழந்தையும் சிக்கினர். குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபோன்று, குழந்தைகளை குறிவைத்து கடத்தப்படும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக