செவ்வாய், 22 மே, 2012
திங்கள், 21 மே, 2012
வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்! … (தொடர்-01)
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
- தொகுப்பு: அஸ்ஹர்
ஸீலானிஉண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.
இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்:
இறையச்சத்தின் அவசியம்:
“அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள், இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்”. (21: 49).உள்ளச்சம் இறைத்தூதர்களின் பண்பாகும்:
“(இறைதூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள், அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள், அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்பட மாட்டார்கள், ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.” (33: 39).
“நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம், அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம், நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் – இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். (21: 90)மறைவில் இறைவனை அஞ்சுதல்:
“எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார். அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.”
“நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை (ப்பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.” (67: 12).யார் நேர்வழியுடையோர்:
“அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான். (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பான (முதஷாபிஹான)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றைக் கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.” (அஸ்ஸுமர்: 23).தொழுகையில் உள்ளச்சத்தை வழியுறுத்தும் வசனங்கள்:
“ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.” (23: 1, 2).உள்ளச்சம் உடையவர்களுக்கு இது இழகுவான காரியம்:
“மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்;லாஹ்;விடம்) உதவி தேடுங்கள், எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்.” (2: 45).உள்ளச்சத்துடன் நிற்றல்:
“தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக்கொள்ளுங்கள், (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச் சப்பாட்டுடன் நில்லுங்கள்.” (2: 238).முதலில் உயர்த்தப்படுவது “உள்ளச்சம்”:
அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தோம், அப்போது அல்லாஹ்வின் தூதர் தனது பார்வையை வானை நோக்கி உயர்த்தியவர்களாக “இது மனிதர்களிலிருந்து கல்வி பரிக்கப்படும் காலமாகும், எது வரையெனில் அதிலிருந்து எதையும் மனிதர்கள் பெற்றுக்கொள்ளாத அளவுக்கு, அப்போது ஸியாதிப்னு லபீதுல் அன்ஸாரீ (ரலி) அவர்கள், எவ்வாறு கல்வி பரிக்கப்படும் நாம் அல்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும் போது, நமது மனைவிமார்களுக்கு, பிள்ளைகளுக்கு அதை ஓதிக்காட்டும் போது என வினவினார். ஸியாதே! உமது தாய் மண்ணைக்கவ்வட்டும், நான் உம்மை மதீனாவின் கல்விமான்களில் ஒருவராக அல்லவா நினைத்திருந்தேன், இந்த தவ்ராத்தும், இன்ஜீலும் யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் இருந்தும் அவர்களுக்கு அது ஏற்படுத்திய பயன் என்ன? என அல்லாஹ்வின் தூதர் கேட்டார். ஜுபைர் குறிப்பிடுகிறார்: உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்களை சந்தித்து உமது சகோதரர் அபூதர்தா கூறுவதை செவிமடுக்கவில்லையா? என்று அவர் கூறியதை நான் அவருக்கு அறிவித்த போது அபூதர்தா கூறியது உண்மை தான் என அவர் கூறினார். நீர் விரும்பினால் முதலில் உயர்த்தப்படும் கல்வியை நான் உமக்கு அறிவிக்கின்றேன் என அவர்கூறிவட்டு, அது தான் உள்ளச்சம். எந்த அளவுக்கெனில் மஸ்ஜிதுக்கு கூட்டுத் தொழுகைக்கு வருபவர்களில் உள்ளச்சமுடையவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு நிலமை மோசமடையும்” (திர்மிதி).
தொழுகைக்காக ஒருவர் முறையாக தன்னைத் தயார் படுத்துதல்:
இது பல அம்சங்களைக் கொண்டாகும். அவைகளில்:- முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல், அதானுக்கும், இகாமத்திற்கு இiடையில் பிரார்த்தித்தல், பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல், அதன் பின்னர் திக்ர், பிரார்த்தனைகள் செய்தல், மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல், தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்து, அடக்கத் தோடும், பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல், தொழுகையின் (ஸஃப் பை) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.
1-பாங்கிற்கு உளத்தூய்மையுடன் பதில் கூறுவதன் மூலம் தொழுகைக்கு தயாராகுதல்:
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “முஅத்தின் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறும் போது (அதை கேட்கும்) ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். முஅத்தின் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறும் போது அஷஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறுவார். பின்பு முஅத்தின் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் எனக்கூறும் போது, அஷஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் எனக்கூறுவார் பிறகு ஹய்யஅலஸ் ஸலாத், ஹய்யஅலல்பஃலாஹ் எனக்கூறும் போது லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் எனக்கூறுவார். பின் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறும் போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். பின் லா இலாஹ் இல்லல்லாஹ் எனக்கூறும் போது இவர் தனது உள்ளத்தால் (உளத்தூய்மையுடன்) லா இலாஹ இல்லல்லாஹ் எனக்கூறினால் அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.” (முஸ்லிம்).
பாங்கைத் தொடர்ந்து துஆ ஓதுதல்:
“எவர் முஅத்தினின் அதானை செவிமடுத்ததன் பின்
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا
“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு ரழீது பில்லாஹி ரப்பன் வபிமுஹம்மதிர் ரஸுலன் வபில் இஸ்லாமி தீனன்”(வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் ஏகன், அவனுக்கு எந்த ஒரு இணையுமில்லை, முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் சாட்சி கூறுகின்றேன். அல்லாஹ்வை ரப்பாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் ஏற்றுக்கொண்டேன்) என்று கூறுவாரோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதிப்னு அபீவக்காஸ் (ரலி), (முஸ்லிம்).
“எவர் முஅத்தினின் அதானை செவிமடுத்ததன் பின்:
اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
(பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!) என்று கூறுவாரோ அவருக்கு நாளை மறுமையில் எனது ஷபாஃஅத் உறுதியாகி விட்டது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), புஹாரி).அழகான முறையில் வுழூச் செய்வது:
அம்ரிப்னு ஸஈத் இப்னுல் ஆஸ் தனது தந்தை பாட்டன் வழியாக அறிவிக்கின்றார்: “நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்த போது, அவர்கள் வுழூ செய்வதற்கு தண்ணீரை கொண்டுவருமாறு சொன்னார்கள், பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்: எந்த ஒரு முஸ்லிமாவது கடமையான தொழுகைக்கு அழகான முறையில் வுழுச் செய்து, உள்ளச்சத்துடன், அதன் ருகூவைப் பேணியவராக தொழுவாரானால் அவர் முன் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக அவை அமைந்து விடும், பெரும் பாவங்களை தவிர்த்து, இவ்வாறு காலம் முழுக்க நடந்து கொண்டிருக்கும்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
அப்துல்லாஹ் இப்னு ஸுனாபிஹிய் கூறுகிறார், அபூ முஹம்மத் வித்ர் தொழுகை கடமையென கூறிய போது, அபூ முஹம்மத் கூறியது பொய்யாகும் எனக் கூறிய உபாததிப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன், அல்லாஹ் ஐந்து நேரத் தொழுகையை கடமையாக்கியிருக்கின்றான், எவர் அதன் வுழூவை அழகாகச் செய்து, குறிப்பிட்ட நேரத்தல் அந்தத் தொழுகைகளையும் நிறைவேற்றி, அதன் ருகூவையும் முழுமையாக செய்து, அதில் உள்ளச்சத்தையும் பேணுவாரானால் அல்லாஹ்விடத்தில் அவரை மன்னிப்பதற்குரிய ஒரு உறுதி மொழி இருக்கின்றது. எவர் அவ்வாறு செய்யவில்லையோ அல்லாஹ்விடத்தில் அவருக்கு எந்த ஒரு உறுதி மொழியும் இல்லை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் நாடினால் தண்டிப்பான்” (அபூதாவுத்).
மிஸ்வாக் பல் துலக்குதலின் மூலம் தயாராகுதல்:
“எனது சமூகத்திற்கு, அல்லது மனிதர்களுக்கு சிரமம் இல்லையென்றால் ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்வதை நான் கட்டளையிட்டிருப்பேன்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி).
பள்ளிக்குச் செல்கின்ற போது ஓதும் துஆ:
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي
سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَمِنْ
أَمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا
وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ أَعْطِنِي نُورًا.
“நாயனே! என் இதயத்தில் ஒளியையும், என் நாவில் ஒளியையும், என் செவியில்
ஒளியையும், என் பார்வையில் ஒளியையும், எனக்குப்பின்னால் ஒளியையும், எனக்கு முன்னால்
ஒளியையும், எனக்கு மேலால் ஒளியையும், எனக்கு கீழால் ஒளியையும், ஏற்படுத்துவாயாக, யா
அல்லாஹ் எனக்கு ஒளியை அருள்வாயாக!” (ஆதாரம்:- முஸ்லிம்).“நான் நபியவர்கள் கூறக் கேட்டேன் “எவர் தொழுகைக்காக முழுமையாக வுழூச் செய்து, பின் கடமையான தொழுகைக்கு நடந்து சென்று, மக்களுடன், அல்லது ஜமாஅத்தாக மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றினால் அவரது முன்னுன்டான பாவங்கள் மன்னிக்கப்படும்” என உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).
உள்ளம், உடல் இரண்டும் தொழுகையில்:
உக்பதிப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாம் முறை வைத்து ஒட்டகைகளை மேய்ப்பவர்களாக இருந்தோம். எனது முறை வந்த போது நான் அவைகளை மேய்த்துவிட்டு இரவானதும் ஓய்வெடுக்க திரும்பிவிட்டேன். நபியவர்கள் நின்றவர்களாக மக்களுக்கு உரை நிகழ்திக் கொண்டிருந்தார்கள், அப்போது அவர்கள் கூறிய செய்தி: எந்த ஒரு முஸ்லிமாவது அழகான முறையில் வுழூச் செய்து, பிறகு எழுந்து தனது முகத்தையும், உள்ளத்தையும் நிலை நிறுத்தியவராக இரண்டு ரக்அத்துகள் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகிவிடும். எவ்வளவு சிறப்பான ஒரு விடயம் இது? என்று நான் கூறினேன், அப்போது அங்கிருந்த ஒருவர் இதற்கு முன் கூறியது இதை விட அழகானதாகும் என்று நான் அவரை பார்த்ததேன், அவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அவர் என்னை நோக்கி நீர் சிறிது நேரத்திற்கு முன்பாக வந்ததை நான் பார்த்தேன். (நீர் வருவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் சொன்ன செய்தி தான்) எவரொருவர் நிறைவாக வுழூச் செய்து பின்னர் :
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
என்று கூறுகின்றாரோ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயலினூடாக சுவர்க்கம் நுழையலாம் என்பதாகும். (முஸ்லிம்).அழகான முறையில் தன்னை அழங்கரித்தவராக செல்லல்:
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (7: 31).
மஸ்ஜிதை நோக்கி வரும் போது அமைதியாக வருதல்:
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழுச் செய்து பிறகு தொழுகையை நாடியவராக மஸ்ஜிதுக்கு வருவாரானால், விரல்களைப் பின்னிக்கொண்டு, கோர்த்துக்கொண்டு வர வேண்டாம். தொழுகைக்கு வர நாடினால் அவர் தொழுகையில் இருப்பவர் போல் தான்” (திர்மிதி).
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகை நிலை நாட்டப்பட்டு விட்டால் நீங்கள் விரைந்தோடி வரவேண்டாம் மிகவும் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாருங்கள். நீங்கள் அடைந்தால் தொழுங்கள், தவறினால் தவறியதை நிறைவேற்றுங்கள். தொழுகைக்காக வரும் ஒருவர் தொழுகையில் இருப்பவர் தான்” (ஆதாரம்:- புஹாரி).
வலது காலை முன்வைத்தவராக மஸ்ஜிதுக்குள் நுழைதல்:
“அல்லாஹ்வின் தூதர் அனைத்துக் காரியங்களிலும் வலதை முற்படுத்துவதை விரும்புபவர்களாக இருந்தார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புஹாரி).
மஸ்ஜிதுக்குள் நுழையும் போது ஓத வேண்டிய பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தல்:
أَعُوذُ بِاللهِ الْعَظيمِ ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَجِيمَ.
(மகத்துவத்திற்குரிய அல்லாஹ்விடம் சங்கையான அவனது முகத்தைக் கொண்டும், பூர்வீக அவனது முழுமையான அதிகாரத்தைக் கொண்டும் சாபத்திற்குள்ளான ஷைத்தானின் தீங்குகளை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.)அல்லாஹ்வின் தூதர் மஸ்ஜிதுக்குள் நுழையும் போது இந்த பிறார்த்தனையை ஓதுபவர்களாக இருந்தார்கள். எவர் இதை ஓதியவராக மஸ்ஜிதுக்குள் நுழைவாரோ, இவர் நாளின் எஞ்சிய நேரத்தில் எனது தீங்குகளை விட்டு பாதுகாப்புப் பெற்று விட்டார் என ஷைத்தான் கூறுகின்றான் என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி), அபூதாவுத்).
“நீங்கள் மஸ்ஜிதுக்கு நுழையும் போது இதை ஓதிக்கொள்ளுங்கள்:
اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ
“அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக”நாயனே! உன் அருள்வாயில்களை எனக்குத் திறந்துவிடுவாயாக!” என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி), முஸ்லிம்).
www.islamkalvi.com thanks
வெள்ளி, 11 மே, 2012
கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி
M.T.M.ஹிஷாம் மதனீ
- M.T.M.ஹிஷாம் (ஸலபி,
மதனி)நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும்.
நபியவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோர் காலத்திலோ இத்தகைய சாதனங்கள் காணப்படவில்லை என்பதைக் காரணங்காட்டி எவரும் அவற்றை தான் விரும்பியமாதிரி உபயோகித்துவிட முடியாது.
இஸ்லாம் எக்காலத்திற்கும் உகந்த மார்க்கமாக உள்ளது. மனிதன் வாழ்கின்ற சூழலில் அவன் எதிர்நோக்கின்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தேவையான சட்டதிட்டங்களை அதில் காணலாம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதனை எப்போதும் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக இஸ்லாம், எல்லா சட்டதிட்டங்களுக்கும் அடிப்படையாக காரணங்களை வகுத்துள்ளது. அத்தகைய காரணங்கள் எவ்விடயத்தை கையாளும் போதும் கவனிக்கப்பட வேண்டும். அவை நபியவர்கள் காலத்தில் இல்லாத கழியுகத்தில் காணப்படக்கூடிய எச்சாதனத்துடனாவது சம்பந்தப்பட்டிருந்தால், குறித்த அச்சாதனத்தின் உபயோகத்தின் போது அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இன்று கையடக்கத் தொலைபேசி எனும் சாதனம் சமுகத்தில் பலராலும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. எத்தனை பேர் அவற்றை உபயோகித்தாலும் அவை உரிய முறையில் உபயோகிக்கப்படுகின்றனவா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. நிச்சயமாக இல்லை, கையடக்கத்தொலைபேசிகளில் உண்டான பல மோசமான விளைவுகள் இதற்குச் சாட்சியாக உள்ளன. இறை நிராகரிப்பாளர்களை ஒரு புறம் விடுங்கள், நாங்கள் மறுமைக்காக வாழ்கின்றவர்கள். நம்முடைய வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வது எமது கடமை. இதனை கருத்தில் கொண்டு நான் கூற இருக்கின்ற சில ஆலோசளைகளை சற்று கூர்ந்து கவனியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்குத் தேவையான உபதேசங்கள் தொடர்பாக பல அறிஞர்கள் தங்கள் நூட்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய நூட்களில் அறபு மொழியைக் கற்றறிந்தவர்களுக்கு வாசிக்கத்தக்க சிறந்த நூலாக, பேராசிரியர் பக்ர் அபூ ஸைத் அவர்களினால் எழுதப்பட்ட அதபுல் ஹாதிப் என்ற நூலை சிபாரிசு செய்கிறேன்.
கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களுக்கான சில உபதேசங்கள்
- கையடக்கத்தொலைபேசிகளில் நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்களில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக நாம் அது விடயத்தில் அல்லாஹ்விடத்தில் பொறுப்புதாரிகளாக உள்ளோம். நாம் எமது பொறுப்புக்களைப்பற்றி விசாரிக்கப்படவுள்ளோம் என்பதை என்றும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாம் பேசக்கூடிய எவ்வகையான வார்த்தையாக இருந்தாலும் அவ்வார்த்தைகளை எழுதுவதற்குத் தயாராக உள்ள வானவர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதனை மனத்தில் கொள்ள வேண்டும்.
- மேலும், நாம் உலகில் வாழும் காலங்களில் இத்தகைய சாதனங்களின் மூலம் ஒருவருடைய சொத்து, உயிர், மானம் போன்றவை பறிபோவதற்குக் காரணமாக இருப்போம் என்றால், நிச்சயமாக மறுமை நாளில் எமக்கு ஈடேற்றம் கிடைக்கும் என நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
- அது மாத்திரமின்றி, இத்தகைய சாதனங்களைத் தவறான வழிகளில் உபயோகிப்பது, இஸ்லாத்தின் அறநெறிகளைப் பாழ்படுத்திய குற்றத்திக்கு உள்ளாக்கிவிடும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- கையடக்கத்தொலைபேசிகள் மூலம் யாருக்கும் இடையூறு மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடாது. யாருடனாவது தொடர்பினை ஏற்படுத்த நாடினால் முதலில் அவருடன் கதைப்பதற்கு உகந்த நேரத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அதன் போது, குறித்த அந்நபரின் அன்றாடத்தேவைகளை நிறைவேற்றும் வேளை, மற்றும் வழமையாகப் புரியும் பணிகள் போன்றன கவனிக்கப்பட வேண்டும்.
- மேலும், நீங்கள் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி, அவர் அதற்கு பதிலளிக்காது போனால் அல்லது வழமைக்கு மாற்றமாக தனது பேச்சை சுருக்கிக் கொண்டால், உடனே அவர் மீது தப்பெண்ணம் கொண்டுவிடாது அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்கான நியாயமான காரணங்களைத்தேட வேண்டும்.
- இன்னும், யாருடன் பேசுவதாக இருந்தாலும் ஒழுக்கமாக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பிறர் மனம் நோகும் விதத்தில் நடந்து கோள்ளக்கூடாது.
- யாருடனாவது பேச முற்படும் போது அது அவருடைய தொலைபேசி இலக்கம்தானா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவ்வாறான வழிமுறை பேணப்படாததின் காரணமாக தகாத உறவுகள் உண்டாகி குடும்பங்களுக்கு மத்தியில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
- நீங்கள் யாருடனாவது கதைக்க முற்படும் போது அல்லது அழைப்புக்கு பதிலளிக்க முற்படும் போது அவர் முஸ்லிமாக இருந்தால் ஸலாத்தைக் கொண்டு எம் பேச்சிக்களை ஆரம்பிக்க வேண்டும்.
- உங்களுடன் அழைப்பினை ஏற்படுத்தியர் சலிப்படையும் அளவுக்கு பேச்சை நீட்டக்கூடாது. ஏனெனில், இவ்வாறு நடந்து கொள்வது ஒருவிதத்தில் உங்களுடன் அழைப்பில் இருப்பவருக்கு இடையூறாகவும் இன்னொரு விதத்தில் உங்களுக்கு அது வீண்விரயமாகவும் அமையும். அப்படி அவசியமான ஒரு விடயத்தை நேரம் எடுத்து கதைக்கவேண்டி ஏற்பட்டால் அழைப்பில் இருப்பவரிடம் அனுமதி எடுத்த பின்பே பேச்சைத் தொடர வேண்டும்.
- ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் யாருடன் கதைக்கின்றீர்களோ அவரின் அனுமதியின்றி அவரது பேச்சை பதிவு செய்யவோ அல்லது அதனை பிறர் முன்னிலையில் சத்தமாகக் கேட்க வைப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.
- பேராசிரியர் பக்ர் அபூ ஸைத் அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஒருவரின் பேச்சை அவரது அனுமதியின்றி பதிவு செய்வது அமானித மோசடியாகும். இத்தகைய செயல்களில் ஒரு முஸ்லிம் ஈடுபடுவது அவனுக்கு உகந்ததல்ல. அவ்வாறு தொலைபேசியில் பேசப்படும் விடயம் மார்க்கத்துடன் தொடர்புடைய அம்சமாகவோ அல்லது உலகத்துடன் தொடர்புடைய அம்சமாகவோ இருக்கலாம்.’ (அதபுல் ஹாதிப் : 28)
- மற்றோர் இடத்தில்; கூறும் போது, ‘ஒருவரின் அனுமதியின்றி அவரின் பேச்சைப் பதிவு செய்வது ஏமாற்றும் நம்பிக்கைத் துரோகமுமாகும். மேலும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பேச்சை பிறருக்கு அனுப்புவது மென்மேலும் மோசடியை அதிகரிக்கச் செய்யும். அத்தோடு அதனில் கூட்டுதல் குறைத்தல் செய்து பதிவு செய்யப்பட்ட பேச்சின் ஒழுங்கில் மாற்றம் செய்வது மிகப் பாரதூரமான குற்றமாகும்.’ (அதபுல் ஹாதிப்: 29,30)
- பிறருடைய தொலைபேசியை அவரது அனுமதியின்றி எடுப்பதையும், அதனுள் உட்சென்று அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பார்வையிடுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
- நவீன கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படுகின்ற விஷேட அம்சங்களான கேமரா, வீடியோ, புலூதூத், ரெகோடர் போன்றவற்றை இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் பாவிக்காதிருத்தல். இத்தகைய சாதனங்கள் சரிவரப் பயன்படுத்தப்படாததின் காரணத்தினால் இன்று வீடுகள், பாடசாலைகள், கடைத்தெருக்கள், பொது இடங்கள் அனைத்தும் சீர்கெட்டு இருக்கின்றன.
- பள்ளிவாசலினுள் பிரவேசிக்கும் போது கையடக்கத்தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து விட்டு அல்லது சைலன்டில் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும். மாற்றமாக அதுவிடயத்தில் கரிசனைகாட்டாமல் தொழுகையில் நுழைந்ததின் பிற்பாடு தொலைபேசி அழைப்புக்கள் வரும் போது தக்வாவைப்பற்றி சிந்திப்பதில் அர்த்தமில்லை. மேலும், இத்தகைய செயல்கள் தொழுகையாளிகளின் சிந்தனைகளைத் திசைதிருப்பக்கூடியனவாகவும் இருக்கின்றன.
- ஒருவருடன் அழைப்பினை ஏற்படுத்தும் போது அழைப்பில் இருப்பவர் உங்களை யார் என்று இனங்காணத்தவறும் பட்சத்தில் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தாது தன்னைப்பற்றிய விபரத்தை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
- ஒரு முறை ஜாபிர் (ரழி) அவர்கள் நபியவர்களின் வீடு நோக்கி வந்து அவரை அழைத்த போது, நபியவர்கள் வீட்டிற்குள் இருந்து கொண்டு யார்? என வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரழி) அவர்கள், நான் என் பதிலளித்தார்கள். அப்போது நபியவர்கள் எனது பதிலை வெறுத்தவர்களாக ‘நான், நான்’ என்று கூறிக் கொண்டு என்னை நோக்கி வந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
- முடியுமான அளவு இசையுடன் தொடர்புடைய சமிக்ஞைகளை ரிங்டொன்னின் (Ringtone) போது உபயோகிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஆலோசனை சபைகள், மார்க்க உபன்யாசம் நடைபெறும் இடங்கள் போன்ற முக்கிய கூட்டங்களின் போது கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்காதிருத்தல்.
- கண்ட கண்ட இடங்களில் தொலைபேசியை வைக்காதிருத்தல்.
- தொலைபேசிகளின் மூலம் குறுந்தகவல்களைப் பரிமாறும் போது ஒழுக்கமான நடைமுறைகளைக் கையாளல்.
- குறுந்தகவல்களின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை உறுதி செய்து கொள்ளல்.
- உங்களுக்கு பிறரிடம் இருந்து கிடைக்கக்கூடிய மோசமான குறுந்தவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் உடனடியாக அழித்துவிட வேண்டும். மேலும், அப்படியான தகவல்களை உங்களுக்குத் தந்தவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.
- தொலைபேசியில் நேரத்தை வீணடிக்காதிருத்தல். அவற்றில் பதிவு செய்யப்பட்ட விடயங்களைப் பார்வையிடுவதினாலும் அதில் காணப்படக்கூடிய விளையாட்டுக்களை விளையாடுவதினாலும் பிரயோசனமின்றி நேரம் கழிகின்றது. இது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல.
- தாவுத் அத்தாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘உன்னுடைய இரட்சகனின் சிந்தனையை விட்டும் உன்னைத் திசைதிருப்பக்கூடிய அனைத்தும் கெட்ட விளைவை ஏற்படுத்தக் கூடியன’ என்கிறார்.
- நாம் உபயோகிக்கக்கூடிய தொலைபேசிகளைக் கொண்டு பெருமை பாராட்டாதிருத்தல். மேலும், பிறரது தொலைபேசிகளைக் கொண்டு மக்கள் முன்னிலையில் தன்னை அடையாளப்படுத்தாதிருத்தல்.
- இசை, பாடல், திரைப்படம், புகைப்படங்கள் போன்றவற்றை கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்வதும், அவற்றை நண்பர்களுக்கு மத்தியில் பரிமாறுவதும் இஸ்லாம் தடை செய்யும் அம்சங்களாகும்.
- ஒவ்வொரு பொறுப்புதாரரும் தனக்குக் கீழால் உள்ளவர்கள் எப்படியான வழிகளில் தம் கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிக்கிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். தன் பொறுப்பில் இருப்பவர்களில் எவர்களுக்கு கையடக்கத்தெலைபேசிகளை உபயோகிப்பதற்கு தகுதியிருக்கின்றது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
- இப்படி கையடக்கத்தொலைபேசியின் உபயோகத்துடன் தொடர்புடைய பல ஒழுக்க விழுமியங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து நாம் உபயோகிக்கின்ற கையடக்கத் தொலைபேசிகளை அல்லாஹ் விரும்பக்கூடிய வழிகளில் பயன்படுத்தி, அவற்றில் அமானித்தைப் பேணக்கூடியர்களாக நானும் நீங்களும் மாறுவோமாக!
www.islamkalvi.com thanks
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)